திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்... தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு என திருமாவளவன் பேட்டி

சென்னை : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திரு.தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (4-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில்  6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 இந்த பேச்சு வார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி  பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், டி.இரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

இதுவரை திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேர்தலில் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எந்தெந்த தொகுதிகளில் விசிக போட்டி என்பது ஓரிரு நாளில் முடிவாகும் என்றும் கூறினார்.

Related Stories: