2021 சட்டமன்ற தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும் தமிழக மக்களின் மனங்களை கவரும் தேர்தல் அறிக்கை மார்ச் 11ம் தேதி வெளியீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை, 2006ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடவிருக்கிறேன் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் ெதாண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திமுக எனும் மக்கள் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும்பொறுப்பைச் சுமந்திருக்கும் நான், உங்களைப் போன்ற தொண்டர்கள் வழங்கிடும் ஊக்கத்தாலும் உணர்வுமிக்க ஒத்துழைப்பாலும் ஓய்வு பற்றி நினைக்காமல் களப்பணியே கண்ணான பணியென்று, கடிகாரம் ஓடும்முன் ஓடி, கழகத்தின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

கடும்பாதை நெடும்பயணம் இதுதான் தேர்தல் களம் என்பதை அறிவேன். உறுதி குலையாத பயணத்தில் களைப்பு தோன்றாதபடி ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற வகையில், மார்ச் 1ம் நாள் என்னுடைய பிறந்தநாளில் உங்களிடமிருந்து குவிந்த இதயபூர்வமான வாழ்த்துகள் மனதிற்கு இதமளிக்கின்றன. தலைவர் கலைஞர் வாழ்த்துகளே என் பிறந்தநாளின் பெரும்பலம். “தந்தை” என்பதைவிட “தலைவர்” என்பதே உங்களைப் போல எனக்கும் பேரனுபவம். அந்த வகையில் தந்தையும் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில், அவரது உணர்வு பூர்வமான வாழ்த்துகளையும், அன்னையார் தயாளு அம்மையாரின் வாழ்த்துகளைப் பெற்று, கழக முன்னோடிகள், குடும்பத்தினர், உறவினர்கள், கழகம் எனும் பெரும் குடும்பத்தின் சொந்தங்களான உடன்பிறப்புகள் ஆகியோரின் அன்பு நிறைந்த வாழ்த்துகளால் என்னை மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டு,

மேலும், மேலும் தொடர்ந்து உழைப்பதற்கு உறுதி கொள்ளும் நாளாகவே பிறந்தநாளைக் கருதுகிறேன். தலைவர் நம்முடன் இல்லாத நிலையிலும், அவர் இல்லையென்ற எண்ணம் சிறிதுமின்றி, இதயமெங்கும் நிறைந்திருக்கிறார், அவர்தான் இயக்குகிறார். இன்முகத்துடன் வழிநடத்துகிறார், இனம் மொழி ஏற்றத்திற்காக அறிவுறுத்துகிறார், பண்பட்ட அரசியல் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த உணர்வுடன் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், அவரது இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்திலும், இருவரையும் ஆளாக்கிய தந்தை பெரியார் நினைவிடத்திலும், பேராசிரியர் அன்பழகன் இல்லத்திலும், தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் மரியாதை செலுத்தி, உங்களில் ஒருவனான என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேன்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ஆயத்தமாகிவிட்ட வாக்காளர்கள், தங்களின் ஒரே நம்பிக்கையான திமுக தலைமையிலான கூட்டணியிடம் மிகுந்த எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகாலமாக தமிழகத்தை இருளில் தள்ளிய அதிமுக ஆட்சியிடமிருந்து தமிழகத்தை விடுவித்து, புதிய விடியலை உருவாக்கவும், எதிர்வரும் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையிலும் லட்சியப் பிரகடனம் ஒன்று, திருச்சியில் மார்ச் 7 அன்று மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும் .அந்தப் பிரகடனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, தமிழக வளர்ச்சிக்கான ஏழு முக்கிய வழிகாட்டுதலை விளக்குதல். மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிடுதல்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டைக் கவனமுடன் கட்டமைப்பதற்கான திமுகவின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும். அதனைத் திருச்சிச் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டதும், 20 நாட்களுக்குள் இந்தத் தொலைநோக்கு ஆவணத்தை திமுக தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் வீடு வீடாக கொண்டு போய்ச் சேர்த்து, தமிழகத்திலுள்ள இரண்டு கோடிக் குடும்பங்களிடமும் இந்தத் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவான பரப்புரைகள் செய்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் தலையாய பணியும் காத்திருக்கிறது. இந்தப் பணி மட்டுமல்ல சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என்ற தலைவர் கலைஞரின் வழியில், கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையும் இறுதி வடிவம் பெற்று வருகிறது.

இந்தப் பணியை மேற்கொள்வதற்காக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் தயாரித்து வருகின்றனர். மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை  2006ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும் தமிழக மக்களின் மனங்களைக் கவரும். கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடவிருக்கிறேன். அதற்கு முன்பாக, களத்தில் நிற்கும் ஆர்வத்துடன் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் விருப்பமனு தந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வகையில் மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.

தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ெதாண்டர்களே, உங்கள் வாழ்த்துப் பூக்களை தேர்தல் களத்தில் வெற்றிமாலையாகத் தொடுத்து, தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவதற்காக உங்களில் ஒருவனான நான் காத்திருக்கிறேன். களைப்பின்றிக் கடமையாற்றுகிறேன். மார்ச் 1 எனக்குப் பிறந்தநாள் என்றாலும், தமிழகத்தின் விடியலுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய கழகத்தின் இலட்சியப் பிரகடனத்தை வெளியிடும் மார்ச் 7 நமக்கான சிறந்த நாள். ஏப்ரல் 6ல் மக்கள் எழுதப்போகும் வெற்றித் தீர்ப்பையும், மே 2 அன்று கழகம் அதனை அதிகாரபூர்வமாகப் பெறப் போவதையும் கட்டியம் கூறும் நாள்.

திமுக வரலாற்றில் திருப்புமுனைகள் பலவற்றைத் தந்த தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7 அன்று திரண்டிடுவோம். தமிழகத்தைப் பத்தாண்டுகளாகப் பிடித்து ஆட்டுகின்ற அதிமுக எனும் காரிருளை விரட்டி, உதயசூரியக் கதிரொளி பரப்பிடும் பிரகடனத்தை வெளியிடுவோம். தமிழக மக்களின் கைகளில் அதனை ஒப்படைத்து, வெற்றியினை உறுதிப்படுத்திடச் சூளுரைப்போம்.

Related Stories: