கலந்தாய்வுக்கான அழைப்பிதழ் வராத விவகாரம்; மருத்துவ படிப்பில் சீட் கேட்டு மாணவி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் அனுப்பாமல் ‘தனது மகள் படிப்பை தேர்வு செய்யவில்லை’ என்று மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அனுப்பிய கடிதத்தை எதிர்த்து திண்டிவனம் மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியை சேர்ந்த சந்திரலேகா தாய்த்தமிழ்ப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரையும், பின்னர் 12ம் வகுப்பு வரை முருங்கம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 471 பெற்று பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சந்திரலேகாவுக்கு 2017-2018ம் ஆண்டில் ”தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது” வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சியை பெற்று, நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நேர்காணலுக்கான அழைப்போ அல்லது 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிலான கலந்தாய்விற்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் என்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீகள் எனவும் அவரது முகவரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வு குழு மூலமாக கடிதம் வந்துள்ளது.

நேர்காணலுக்கு அழைக்காமலே அதில் கலந்து கொண்டதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியை வேண்டாம் என தவிர்த்து விட்டதாகவும் தான் பதில் அளித்ததாக தனக்கு மருத்துவ கவுன்சில் மூலமாக ஒரு கடிதம் வந்திருப்பது சந்திரலேகாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அவரது தாயார் மகேஷ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் மனோகரன், மருத்துவ கலந்தாய்வில் மாணவி கலந்துகொண்டதால்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன், மாணவியின் தகுதியை ஆராய்ந்து இடம் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், தேர்வுக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மாணவி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: