ஏர் இந்தியா அலுவலகத்தை சூறையாடிய வழக்கு பினராய் விஜயன் மருமகன், எம்எல்ஏ சிறையில் அடைப்பு: கேரளாவில் தேர்தல் நேரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த முதல்வர் பினராய் விஜயனின் மருமகன்,  மார்க்சிஸ்ட் எம்எல்ஏ உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் விமான கட்டணம் உயர்வு, கோழிக்கோடு விமான நிலையத்தில் சேவைகளை குறைத்தது ஆகியவற்றை கண்டித்து, கடந்த 2010 செப்டம்பர் 6ம் தேதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எப்ஐ) ஏர் இந்தியா அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, ஏர் இந்தியா அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த பேரணியை டிஒய்எப்ஐ மாநில செயலாளரான ராஜேஷ் தொடங்கி வைத்தார். தற்போதைய டிஒய்எப்ஐ தேசிய தலைவர் முகமது ரியாஸ், மார்க்சிஸ்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் தினேஷ் (அப்போதைய டிஒய்எப்ஐ செயலாளர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வன்முறை தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோழிக்கோடு குற்றவியல் தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்து வந்தது. தற்போது, எம்எல்ஏவாக உள்ள ராஜேஷ், முகமது ரியாஸ், தினேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், 3 பேரும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதால், ஏர் இந்திய அலுவலக வழக்கில் இருந்து ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 பேரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர்கள் ஆஜராயினர். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரும் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முகமது ரியாஸ், கேரள முதல்வர் பினராய் விஜயனின் மகள் வீணாவை கடந்த ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டவர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வரின் மருமகன், ஆளும் கட்சி எம்எல்ஏ உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: