13 அரசு நிறுவனங்களை இணைத்து டெல்லி திறன், தொழில் முனைவோர் பல்கலைக்கழகம்: ஆம் ஆத்மி அரசு முடிவு

புதுடெல்லி: உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதற்காக, 13 அரசுத்துறை நிறுவனங்களை ஒன்றிணைத்து டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெல்லியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையில்  திறன் கல்வியை சீராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக  டெல்லி பல்கலைக்கழக கலைக் கல்லூரி மற்றும் டெல்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி இவை இணைப்புக்கு பின்னர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக செயல்படும்.

இணைக்கப்படும் நிறுவனங்களில் 10 அரசு தொழில்நுட்ப நிறுவனங்கள், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் டூல் இன்ஜினியரிங் (வஜீர்பூர் மற்றும் ஓக்லா வளாகம்) மற்றும் கோவிந்த் பல்லப் பந்த் பொறியியல் கல்லூரி ஆகியவை அடங்கும். இதுதவிர, மாணவர்களுக்கு திறன் வாய்ப்பை வழங்குவதற்காகவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் அவர்களின் வேலை வாய்ப்புகளை உயர்த்துவதற்காகவும் புஷ்ப் விஹாரில் அரசாங்கத்தின் புதிய உலகத் தரம் வாய்ந்த திறன் மையத்தை நிறுவுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக புதிய மையத்திற்கு அமைச்சரவை ₹ 9.9 கோடியை ஒதுக்க அனுமதி வழங்கியது. டெல்லி முழுவதும் 25 உலகத்தரம் வாய்ந்த திறன் மையங்களை நிறுவுவது அரசாங்கத்தின் தொலைநோக்கின் ஒரு பகுதியாகும்.இவவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில்,”எங்கள் இளைஞர்களுக்கான திறன் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு டெல்லி  அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இணைப்புகள் திறமையான சுற்றுச்சூழல் அமைப்பை  மிகவும் திறமையாக்கும் மற்றும் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும்  திறன் வாய்ப்புகளை உயர்த்தும்” என்றார்.

Related Stories: