மீனாட்சி கோயிலில் இன்று முதல் மீண்டும் அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படுகிறது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் துவங்கியது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே உள்ள அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் மதியம் உணவு வழங்கப்படும். கொரோனா பெருந்தொற்றால் இந்த அன்னதானம் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த மாதம் முதல் காலை 8 மணியளவில் பக்தர்க் 300 பேருக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என ஏதாவது ஒரு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டு வந்தது.  இருப்பினும் இதற்கு பதிலாக பகல் 12 மணியளவில் அன்னதானம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தினமும் பகல் 12 மணியளவில் கோயில் அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படுகிறது. இன்று 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் உணவுப் பொட்டலத்தை வாங்கிச் சென்றனர்.

பக்தர்களின் வருகையை பொறுத்து, உணவுப் பொட்டலத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், விரைவில் அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு இலை போட்டு உணவு பரிமாறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: