9 லிட்டர் பீர்..4.5 லி. பிராந்தி..4 லி. சாராயம்!: புதுவையில் தனிநபர் மதுபான விற்பனை அளவு நிர்ணயம்..!!

புதுச்சேரி: புதுவையில் தனிநபர் மதுபான விற்பனை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி இரு மாநில எல்லைகளில் மது கடத்தலை தடுக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை ஒட்டி மதுபான கடத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறை, கலால்துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கலால்துறை ஆணையர் சுதாகர் கூறுகையில், புதுச்சேரியில் மதுக்கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து மதுக்கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி மற்றும் 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் மதுபானம் கடத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளும் மதுக்கடத்தலை தடுக்க ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்த தகவல்களை பரிமாறி கொண்டனர்.

Related Stories: