கூடுதல் தொகுதி கேட்டு பெற தீவிரம்: தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகாவுடன் இன்று அதிமுக தலைமை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. முன்னதாக நேற்றிரவு அதிமுக குழு ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுடனான பேச்சுவார்த்தை முடிந்து 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதிக தொகுதிகளை கேட்டு இந்த கட்சிகள் பிடிவாதம் செய்வதால் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தமாகாவுடன் இன்று அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் கேட்டு அதற்கான பட்டியலையும் தமாகா தலைமை கொடுத்துள்ளது. ஆனாலும் 7 தொகுதிகள் வரை தமாகாவுக்கு ஒதுக்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது. இன்னும் கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக உள்ளது. எனவே, இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.

Related Stories: