கபூர்தலா: முதல் முறையாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி பஞ்சாப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் முதற்கட்டமாக 50 ரயில் பெட்டிகள் தயார் செய்யப்படும். விமானங்களைப் போல ரயில்களிலும் எகானமி வகுப்பை அறிமுகப்படுத்தும் விதமாக, ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ஒவ்வொரு படுக்கையிலும் தனிமனித ஏசி துவாரங்கள், சொகுசு படுக்கைகள், மேல் படுக்கைக்கு எளிதில் ஏறும் வகையிலான பிடிமானங்கள், அழகிய வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் எகானமி ரயில் பெட்டி ஒன்று கடந்த 10ம் தேதி தயாரிக்கப்பட்டு ரயில்வேயின் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தர அமைப்பிடம் வழங்கப்பட்டது.