×

கடைசி டெஸ்டுக்கும் ‘அதே’ ஆடுகளம் தான்...! ரகானே ரகிட ரகிட!

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடன் நாளை தொடங்க உள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே கூறியுள்ளார். சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றதும், இந்த தொடரில் இந்தியா எதிர்ப்பின்றி சரணடைந்துவிடும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அடுத்த 2 டெஸ்டிலும் அபாரமாக விளையாடிய இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும், 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிகளை வசப்படுத்தி மரண அடி கொடுத்தது. அதே சமயம் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளங்கள் குறித்த சர்ச்சையும் வெடித்தது. அதிலும், மோடி ஸ்டேடியத்தில் நடந்த 3வது போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததாக இங்கிலாந்து தரப்பில் இருந்து புலம்பல் வெளிப்பட்டது. ‘மிக மோசமான ஆடுகளம்’ அமைத்ததற்காக இந்திய அணிக்கு புள்ளிகளைக் குறைக்க வேண்டும் என்றும் சிலர் பொங்கினர். இந்நிலையில், செய்தியாளர்களிடன் நேற்று பேசிய ரகானே கூறுகையில், ‘கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் 2வது மற்றும் 3வது டெஸ்டில் இருந்தது போலவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அது பற்றியாகக் கூற முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆடுகளத்தை விமர்சிப்பவர்கள் தங்கள் விருப்பம் போல பேசிக்கொள்ளட்டும். அது பற்றி கவலை இல்லை. நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும்போது, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைப்பது குறித்து குறை கூறுவதில்லை’ என்றார். 


Tags : It is the 'same' pitch for the last Test ...! Ragane rakita rakita!
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்