தனித்து போட்டி என்ற மிரட்டலுக்கு பணிந்து தேமுதிகவுடன் மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை: 2வதாக நடந்த பேச்சும் தோல்வி

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெற தேமுதிக கேட்ட தொகுதிகள் மற்றும் பணத்தை தருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜ, பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்பட்டது.

 ”நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி என்று தேமுதிகவின் கட்சி கொடியையும், நமது சின்னம் முரசு” என்றும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுகவை மிரட்ட தான் இவ்வாறு பதிவிட்டதாக அதிமுகவில் சிலர் கருத்து தெரிவித்தனர். தேமுதிகவும் கூட்டணியில் இருந்தால் தான் நமக்கு பலமாக இருக்கும் என்று எடப்பாடி கருதியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக, தேமுதிகவை நேற்று அழைத்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில்  துணை பொது செயலாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும், பாமகவுக்கு வழங்கப்பட்ட செலவுக்கான பணம் வேண்டும் என்பதில் தேமுதிகவினர் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 20 தொகுதிகளுக்கு குறையாமல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பாமகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதற்கு அதிமுகவினர் சம்மதிக்கவில்லை. இதனால் அதிமுக, தேமுதிக பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை தேமுதிகவுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அதிமுகவுக்குத்தான் வாழ்வா, சாவா பிரச்னை. இதனால்தான் தேமுதிக எவ்வளவு முரண்டு பிடித்தாலும் அதிமுக இறங்கி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: