பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்

சிதம்பரம்: ஒருதலை காதலால் சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஆசிரியர் சரமாரி கத்தியால் குத்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த டி.பழூர் அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் புனிதா (18) தோட்டக்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ரோஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலை மாணவி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விடுதிக்கு வெளியே வந்துள்ளார்.

விடுதிக்கு அருகே உள்ள மருத்துவ குடியிருப்பு எதிரில் வந்த போது திடீரென இளைஞர் ஒருவர் மாணவி புனிதாவை ஆபாசமாக திட்டி, என்னை காதலிக்க மாட்டாயா எனக் கேட்டு பேனா கத்தியால் கழுத்து மற்றும் கையில் கிழித்து உள்ளார்.

பின்னர் அதே பேனா கத்தியால் தன்னையும் கிழித்துக் கொண்டுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று புனிதாவை அந்த இளைஞரிடம் இருந்து மீட்டனர். பின்னர் இருவரையும் சிகிச்சைக்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி புனிதாவை பேனா கத்தியால் குத்தியவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளூர்வடை கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (30) என்பதும், இவர் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் ஆசிரியராக பணியாற்றிய விபரமும் தெரியவந்தது. மாணவி புனிதா பள்ளியில் படித்த போது சுமார் ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்ததும் தெரிய வந்துள்ளது. அந்த பழக்கத்தில்தான் நேற்று பல்கலைக்கழகத்துக்கு சென்று தன்னை காதலிக்க மாட்டாயா என கேட்டு கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மாணவி புனிதா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார், பிரான்சிஸ் சேவியர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மீது முன்னாள் மாணவர் ஒருவர் காதல் விவகாரத்தில் மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் விஷம் குடித்த சம்பவம் நடந்ததும், பின்னர் இருவரும் சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: