8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது

களக்காடு: 8 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையால் சுற்றுசூழல் சுற்றுலாஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி ஓடுவதாலும், அதில் குளுமை அதிகம் என்பதாலும் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் களக்காடு புலிகள் காப்பகத்தில் புலி மற்றும் வனவிலங்குகள் குறித்த பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் 100 பேர் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணிகள் ககாரணமாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மூடப்பட்ட தலையணை 8 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது. இதையடுத்து தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வரும் அவர்கள் அங்கு ஓடும் இதமான குளுமை நிறைந்த தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் உற்சாகத்துடன் விளையாடுகின்றனர். தற்போது களக்காடு பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் தலையணையிலும் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குளியல் நடத்தும் வகையில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனசரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: