மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்: தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம்: திருச்சியில் 7ம் தேதி மாநாடு போன்று சிறப்பு கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மக்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. வருகிற 7ம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும்  வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மக்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. நேற்று முன்தினத்தில் இருந்து எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் 7ம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைக் திமுகவின் முதன்மைச் செயலாளர் நேரு மேற்கொண்டு இருக்கிறார்.

7ம் தேதி திருச்சியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை தமிழகத்திற்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலை நோக்குப் பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிட இருக்கிறேன். இதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது.  மார்ச் 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்தத் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடவிருக்கிறேன்.

தமிழகத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையினை, அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். அதை திமுகவினர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைகள், வார்டுகள், கிராமங்கள் அளவில், பட்டிதொட்டிகள் தோறும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: உங்கள் பிறந்தநாளை முன்னிட்டு என்ன சொல்லவிருக்கிறீர்கள்? இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் செய்தியிலேயே சொல்லியிருக்கிறேனே.

இன்றைக்கு ஊதாரித்தனமான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை மாற்றுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் தாண்டி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்றுவதில் இருந்து என்றைக்கும் திமுக பின்வாங்காது. எப்படி கொரோனா  நோயில் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு துணை நின்றோமோ, அதேபோல் தொடர்ந்து எந்த நிலையில் இருந்தாலும் திமுக மக்களுக்கு பணியாற்றும் என்பதைத்தான் என்னுடைய பிறந்தநாள் செய்தியாக நான் சொல்லிக்கொள்கிறேன். நேற்றைக்கு அமித்ஷா தி.மு.க. மீது பல்வேறு புகார்களை விழுப்புரம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். அதிமுக பாஜ டபுள் இன்ஜின் மாதிரி செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்.

அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அதாவது ஏற்கனவே மோடி பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது அமித்ஷா பேசி இருக்கிறார். நாளைக்கு மத்தியில் இருந்து பாஜவிலிருந்து வருபவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் பேசப்போகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.  ஏனென்றால், ஊழல்களையே செய்து, ஊழலிலேயே ஊதாரித்தனமாக இருந்து, ஊழலிலேயே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்து, கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் செய்து கொண்டிருக்கும் ஓ.பி.எஸ். ஒரு பக்கமும், ஈ.பி.எஸ். ஒரு பக்கமுமாக இருவரது கரங்களைத்தான் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினார்கள். அதிலிருந்து ஊழலுக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது ஆட்சியில் கடன் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த அரசின் கடன் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தக் கடன் அதிகரிப்பதைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? நிச்சயமாக, நிச்சயமாக அதெல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அப்போது பாருங்கள்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Related Stories: