புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், அவரது நன்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், ”இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதில் விசாரணைக்கான எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால் பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் தொடர்ந்துள்ள விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்ரமணியம் பிரசாத்,” இதுதொடர்பான வழக்கில் பலமுறை வழக்கறிஞராக ஆஜராகி பணியாற்றி இருப்பதால் எனது தலைமையில் விசாரணை நடத்துவது என்பது சரியான ஒன்றாக இருக்காது. அதனால் இந்த விசாரணையில் இருந்து விலகுகிறேன்’’ என தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.