ஐஎஸ்எல் அரை இறுதி மார்ச் 5ல் தொடக்கம்: ‘லீக் வின்னர்’ மும்பை

பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டிகள் மார்ச் 5ம் தேதி தொடங்குகின்றன. கோவாவின் பதோர்தா, பாம்போலிம்  நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் மும்பை - கோவா, ஏடிகே - நார்த்ஈஸ்ட் அணிகள் மோதுகின்றன. நடப்புத் ஐஎஸ்எல் தொடரின் லீக் சுற்று  நேற்று  முன்தினம் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு அணியும் தலா 20 லீக் ஆட்டங்களில் மோதியதன் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4  இடங்களை பிடித்த மும்பை, நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பகான், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி, எப்சி கோவா அணிகள் அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளன.

அரையிறுதி 2 கட்டமாக நடைபெறும்

முதல் கட்ட அரையிறுதி மார்ச் 5, 6 தேதிகளிலும், 2வது கட்டம் மார்ச் 8, 9 தேதிகளிலும் நடக்க உள்ளன. இந்த 4 போட்டிகளும் பதோர்தா,  பாம்போலிம்  நகரங்களில் நடக்கும். இறுதிப் போட்டி  பதோர்தோவில் மார்ச் 13ம் தேதி நடக்க உள்ளது. போட்டிகள் அனைத்தும் வழக்கம் போல் இரவு  7.30 மணிக்கு தொடங்கும்.

மும்பைக்கு லீக் கோப்பை: லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை, ஏடிகே அணிகள் தலா 40 புள்ளிகள்  பெற்று சமநிலை  வகித்ததால் கோல் வித்தியாசத்தின்  அடிப்படையில் மும்பை முதலிடம் பிடித்து ‘லீக் வின்னர்’ டிராபியை தட்டிச் சென்றது. கடந்த ஆண்டு  அறிமுகமான இந்த கோப்பையை கோவா வென்றிருந்தது.

Related Stories: