புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்  கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது முறையாக போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி  அடைந்தார். அப்போது டிரம்ப் புதிய கட்சி துவங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் ஓர்லேண்டோ நகரில்  நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் எந்த திட்டமும் இல்லை. குடியரசுக் கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த போகிறேன். 3வது முறையாக,  வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன்.

குடியரசு கட்சி நிலைத்திருக்கும், வெற்றி பெறும். அனைவரும் இணைந்து அமெரிக்காவின் சுதந்திர ஒளியை பரவ செய்வோம். பைடனின் கொள்கைகள்  நாட்டை சோசலிசத்தை நோக்கி கொண்டு செல்கிறது. அதனை குடியரசு கட்சி ஒருநாளும் ஏற்றுக் கொள்ளாது. பைடனின் ஆட்சி, வேலை வாய்ப்பு,  குடும்பம், எல்லை விவகாரம், எரிசக்தி, பெண்கள், அறிவியல் ஆகிய அனைத்துக்கும் எதிராக உள்ளது. பைடனின் ஆட்சி மோசமாக இருக்கும் என்பது  அறிந்தது. ஆனால், இந்தளவு மோசமாக இருக்கும் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஒரே மாதத்தில், அமெரிக்கர்களுக்கு முதலில் முன்னுரிமை  என்பது போய், கடைசி என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: