பெங்களூரு: அரசு நிலம், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக மாதந்தோறும் ஒரு நாள் சிறப்பு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் கூறினார். பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அரசு நிலங்களை பாதுகாப்பதற்காக தனி கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இதற்காக ஒதுக்கப்படும். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதை சொந்தமாக்கிக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலத்தை போல் ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளின் பரப்பு குறைந்தால் அது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பாக அமையும். நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே குறைந்து கொண்டு இருக்கும் நிலையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு தடுக்கப்படவில்லை என்றால் அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.