68வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை: மன்மோகன்சிங், ராகுல், ரஜினி, கமல் தொலைபேசியில் வாழ்த்து; நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்த தொண்டர்கள்

சென்னை: மு.க.ஸ்டாலின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, மன்மோகன்சிங், ராகுல் காந்தி, ரஜினி காந்த், கமல் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏராளமான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 68வது வயது பிறந்த நாள். இதை முன்னிட்டு நேற்று காலை 6.50 மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார்.

பின்னர் அவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, சிற்றரசு, இளைய அருணா.

எம்எல்ஏக்கள் ரங்கநாதன், மோகன், ரவிச்சந்திரன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், வாகை சந்திரசேகர், பூங்கோதை ஆலடி அருணா, சுரேஷ் ராஜன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் வி.பி.மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

பின்னர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம் சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் கலைஞரின் சி.ஐ.டி. காலனி இல்லம் மற்றும் பேராசிரியர் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று அவர்களது திருவுருப்படங்களுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டினார். காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கே, சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவர் நரேஷ் குஜரால் எம்பி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொது செயலாளர் வைகோ, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், வைத்தியலிங்கம் எம்பி, திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்,

விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.நாராயணன், மக்கள் விடுதலை கட்சித்தலைவர் முருகவேல் ராஜன், குன்றக்குடி அடிகளார், பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,  கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட செயலாளர்கள் க.சுந்தர், தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, புகழேந்தி, வி.ஜி.ராஜேந்திரன், பிச்சாண்டி, நந்தகுமார், திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

* டிவிட்டரில் டிரெண்ட்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளில், ‘‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மு.க.ஸ்டாலின்’’ என்று திமுக தொண்டர்கள் டிவிட்டரில் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தனர். கடந்த சில மணி நேரங்களில் இந்திய அளவில் அதிக டிவிட்டுகள் பதியப் பெற்று தேசிய அளவில், ஸ்டாலின் பிறந்தநாள் டிரெண்ட் ஆனது.

* நல்லாட்சிக்கு வெள்ளி செங்கோல்

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முக சுந்தரம்,” நீங்கள்  தமிழகத்தின் முதல்வராகி நல் ஆட்சி நடத்த வேண்டும்’ என்று கூறி ஆளுயர வெள்ளி செங்கோல் ஒன்றை பரிசாக வழங்கினார். இதே போல வீரவாளும் கட்சியினர் பரிசளித்தனர். அதே போல நிர்வாகி ஒருவர் ஆடு ஒன்றை பரிசாக வழங்கினார். மீன் தொட்டியும் ஒருவர் பரிசாக வழங்கினார். ஏராளமானவர்கள் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

* 3 மணி நேரம் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுமார் 9 மணியளவில் தொண்டர்களிடம் வாழ்த்து பெற தொடங்கினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கூட்டம், கூட்டமாக திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று  மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிற்பகல் 12 மணி வரை அவர்  வாழ்த்துக்களை பெற்றார். 3 மணி நேரம் மு.க.ஸ்டாலின் நின்று கொண்டே தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: