ரூ.5 கோடி கடன் வாங்கியதாக மோசடி வழக்கில் ஜேப்பியார் மகள் ஷீலா உள்பட 5 பேர் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: வீட்டை அடமானம் வைத்து ரூ.5 கோடி கடன் பெற்றதாக கூறி அவரது வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜேப்பியார் மகள் ஷீலா மற்றும் முன்னாள் ஊழியர்கள் உட்பட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் மனைவி ரெமிபாய்(79) புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ராயப்பேட்டை கணபதி தெருவில் கடந்த 1985ம் ஆண்டு 3,600 சதுரடி கொண்ட வீட்டை எனது கணவர் ஜேப்பியார் எனது பெயரில் வாங்கினார். ஆரம்ப காலத்தில் நான் எனது கணவருடன் அங்கு தான் வசித்து வந்தோன். கணவர் இறந்த பிறகு பிறகு அந்த வீட்டை அப்படியே வைத்திருந்தேன்.

இந்நிலையில் ராயப்பேட்டை வீட்டின் கேட்டை 2019ம் வரும் பிப்ரவரி 16ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் பூட்டியது. அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை கவனித்தேன். உடனே வீட்டை பூட்டிய மூவரிடம் பேசியபோது இந்த இடம் சென்னை நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த தனியார் பைனான்சியரான முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது என்று கூறினார். உடனே எனது கணவரிடம் செயலாளராக பணியாற்றிய ஜோஸிடம் கேட்டபோது, ஜேப்பியார் அவசர தேவைக்காக ரூ.5 கோடி தேவைப்பட்டதால் வீட்டின் மீது கடனாக பணம் பெற்றதாக கூறினார். இதில் ஏதோ மோசடி நடந்துள்ளது.

எனவே உரிய விசாரணை நடத்தி வீட்டை மீட்டு தர வேண்டும் என்று செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் படி போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜேப்பியாரிடன் செயலாளர் ஜோஸ், தனது சகோதரன் ஜஸ்டின், பைனான்சியர் முரளிதரன்(59), மற்றும் அவரது உதவியாளராக வேலை செய்த பிரான்சிஸ் (எ) பினு பிரான்சிஸ்(52), ஜேப்பியார் மகள் ஷீலா ஆகிய ஐந்து பேர் இணைந்து மோசடி செய்துள்ளனர். அதில், ஜேப்பியார் அவசர கடனுக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாக ரெமிபாய்க்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை வைத்து பைனான்சியர் முரளிதரனுடன் இணைந்து நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: