தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக ரூ.15 லட்சம் கொண்டு செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளதால்  அதற்காக குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உரிய ஆதாரங்களை காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம், சோதனைகள் நடத்தலாம். ஒட்டுமொத்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உரிய ஆதாரங்களை காட்டி, 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம். ஆதாரங்கள் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: