ரூ.16 லட்சம் மோசடி; தேமுதிக நிர்வாகி கைது

சென்னை: மடிப்பாக்கம் பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்தவர் மேனகா (28). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தேமுதிக வட்ட செயலாளர் சரத்குமார் (28) என்பவர், விமான நிலையம் வரும் கடத்தல் தங்க நகைகளை  குறைந்த விலையில் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மேனகா, கடந்த 2019ல் ஆண்டு முதல் கட்டமாக ரூ.30 ஆயிரத்தை சரத்குமாரிடம் கொடுத்துள்ளார். அதற்கு ஈடாக தங்க காசுகளை சரத்குமார் தந்தார். இது குறித்து மேனகா அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் பணத்தை வாங்கி ரூ.16 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சரத்குமார் தங்க நகைகள் இன்னும் வரவில்லை வந்தவுடன் கொடுப்பதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதில்  சந்தேகமடைந்த மேனகா, கடந்த 2019ம் ஆண்டு மடிப்பாக்கம் போலீசில் சரத்குமார் மீது புகார் கொடுத்தார். இந்நிலையில் மேனகா பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரனிடம் புகார் மனு தந்தார். இதையடுத்து  அவரது உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் சரத்குமாரை கைது செய்தனர்.

Related Stories: