முதலுக்கே மோசம் பண்றீங்களேம்மா.... அமைச்சரை அலறவிட்ட பாஜ பெண் நிர்வாகி

மதுரை மாநகர அதிமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் செல்லூர் ராஜூ. ஏற்கனவே இருமுறை மதுரை மேற்கு தொகுதியில் வென்றுள்ளார். உரிய பணிகளை முடிக்காததால், தற்போது மீண்டும் போட்டியிட்டால், கரை சேருவோமா என்ற ஐயத்தில், தனக்கு சாதகமான, தனது வீடு இருக்கும் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். இதனால் தற்போதைய அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு, மீண்டும் சீட்டுக்கு சிபாரிசு செய்யவும் மறுத்து விட்டார். எப்படியும் தலைமையில் பேசி தெற்குக்கு சீட்டு பெற்றுவிடலாம் என ஒரு சில பணிகளை அத்தொகுதியில் மேற்கொண்டார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ கட்சியின் மகளிரணியை சேர்ந்த மகாலட்சுமி, திடீரென்று இதே தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்தார். தங்களுக்கு தெரிந்த சுயஉதவிக் குழு மூலம் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஷாக் ஆகியிருக்கிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியாத நிலையில், இப்படி கூட்டணி தர்மத்தை மீறி பாஜ செயல்படுவதை கண்டு கட்சிக்காரர்களிடம் குமுறி வருகிறார். இதுபற்றி அறியாத இத்தொகுதியில் உள்ள அதிமுகவினர் சிலர், தங்களுக்கு இந்த தொகுதி சீட்டுக்கு சிபாரிசு செய்யும்படி அமைச்சரை அணுகினார்களாம். ‘தொகுதி சீட்டு யாருக்குன்னு இன்னும் கூட்டணியில் முடிவாகல, அதுக்குள்ள அந்தம்மா.. அதுபாட்டுக்கு, கொட்டகைய போட்டு, வீதி வீதியா சுத்துது... இங்கே முதலுக்கு மோசம் போகுது... நம்மகிட்டேயே அது மோதுது... இதுல.. நான் யாருக்கு சிபாரிசு செய்ய?’ என கோபத்தோடு கட்சிக்காரர்களிடம் புலம்பி வருகிறாராம்.

Related Stories: