துவாரகா பகுதியில் பயங்கரம்: அதிவேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: மூன்று பேர் கும்பல் கைது

புதுடெல்லி: படுவேகமாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவரது சகோதரர் கத்திக்குத்து காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் துவாரகா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துவாரகாவின் பிந்தாபூர் பகுதியை சேர்ந்த சூரஜ் பிரகாஷ் சிங்(30) மற்றும் அவரது சகோதரர் சந்தர்(28) இருவரும் நேற்று முன்தினம் அருகிலுள்ள மார்க்கெட்டுக்கு மீன் வாங்கி வரவதற்காக சென்றனர். அப்போது, வாலிபர் ஒருவர் பைக்கில் படுவேகமாக ஓட்டிச்சென்றார். சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், அந்த வாலிபரை சூரஜ் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் தனது சக நண்பர்களை வரவழைத்தார். பின்னர் சூரஜ் சகோதர்கள் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி காயப்படுத்தினர். அவர்களை அருகிலுள்ள அக்கம்பக்கத்தினர் மீட்டு தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், சூரஜ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். அவரது சேகதாரர் சந்தர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தர் அளித்த புகாரின் பேரில் பிந்தாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பியூஷ் சர்மா (19) என்கிற காகு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தீப் சர்மா (31) மற்றும் சிவ் நாராயண் (32) ஆகியோரை கைது செய்தனர்.குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை கமிஷனர சந்தோஷ்குமார் மீனா தெரிவித்தார்.

Related Stories: