பக்கத்து வீட்டில் நடந்த சண்டையை விலக்க சென்ற கர்ப்பிணி மீது தாக்குதல்: கரு கலைந்ததால் போலீசில் புகார் :2 பேர் கைது

கொள்ளேகால்:  சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா உத்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமா. இவரது மனைவி மாதேவி. இவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டை சேர்ந்த மாதேஷா, அவரது சகோதரர் சிவண்ணாவுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மாதேவி அவர்களிடம் சென்று அதிக சத்தத்தால் தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி சண்டையை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதில் மாதேவிக்கும், மாதேஷா மற்றும் சிவண்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவரும் மாதேவியின் வயிற்று பகுதியில் தாக்கிவிட்டு ஓடி விட்டனர்.அவர்கள் தாக்கியதில் மாதேவிக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. அவரை கொள்ளேகால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தனது மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சோமா கொள்ளேகால் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாதேஷா மற்றும் அவரது சகோதரர் சிவண்ணா ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மாதேஷா மற்றும் சிவண்ணா ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: