சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் தேர்தலில் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை கடந்த 26-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். குறிப்பாக, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து, தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கையில், வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணபிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்படும். படிவம் 12D யை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பூர்ச்சி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மார்ச் 16-க்குள் நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்கு அளிப்பவர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டவர்களில்,
* லோகோ பைலட்
* உதவி லோகோ பைலட்
* மோட்டார் மேன்
* காவலர்கள்
* பயண டிக்கெட் பரிசோதகர்
* ஏ.சி கோர்ச் உதவியாளர்
* ரயில்வே
* கப்பல் போக்குவரத்து
* விமான போக்குவரத்து
* பத்திரிகையாளர்கள்
தேர்தல் நடைபெறும் அன்று பணியில் இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
* வாக்குப்பதிவு: ஏப்ரல் 6-ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி மார்ச் 12-ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி