அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்

சென்னை: 6 சவரன் வரையிலான தங்க நகைகள் மீதான கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் முதல்வர் அறிவித்தப்படி கடன் தள்ளுபடி அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை பெறப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியானாலும் அதற்கான அரசாணை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழக அரசால் புதிதாக ஆணைகள் எதையும் வெளியிட முடியாது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அரசாணைகளின் இறுதியில் கூடுதல் வரிகளை சேர்க்க முடியாதபடி கோடிட்டு பதிவேட்டின் நகலை தனக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் தற்போது வரை தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது. இதுவரை அரசாணை எதுவும் வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா என்று மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

இதனிடையே தமிழக கூட்டுறவு வங்கிகள் சங்கங்களில் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 6 சவரன் வரை அடகு வைத்து பெற்றுள்ள மொத்த கடன் தொகை சுமார் ரூ.1 லட்சம் கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை தமிழக அரசின் ஓராண்டுக்கான செலவு தொகையில் 30% என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையினை தள்ளுபடி செய்வது ஏற்கனவே கடன் சுமையால் தத்தளிக்கும் அதிமுக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் கடன் தள்ளுபடியை அரசு அமல்படுத்துமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

Related Stories: