வரும் 7ம் தேதி அடுத்த 10 ஆண்டு தமிழகத்துக்கான லட்சிய தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன் : மு.க.ஸ்டாலின்

சென்னை : ஊடகங்கள் வாயிலாகவும் நேரிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி. வரும் 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன். 10 ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கை நான் வரையறுத்து இருக்கிறேன். மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடலில் இது முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்கள், பல்துறை அறிஞர்களுடன் விவாதித்து தொலைநோக்கு பார்வை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வை குறித்த ஆவணத்தை அடுத்த 20 நாட்களில் 2 கோடி குடும்பத்திடம் கொண்டு சேர்க்க உள்ளோம்.ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது.தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ஆட்சி மாற்றம் 2 மாதத்தில் ஏற்பட உள்ளது. திமுக குறித்து மோடி பேசினார்; நேற்று அமித் ஷா பேசினார். இனிமே பாஜகவில் இருந்து வரக்கூடிய அனைவரும் அது தான் பேசுவார்கள். ஊழலில் திளைத்து கொண்டிருக்கிற அதிமுக அரசு ஊழல் செய்ய யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் ” என்றார்.

Related Stories: