கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு தடை

செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அரசு மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திராகாந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் சென்னை அணுமின் நிலையம் என பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளின் பாதுகாப்பு போன்றவற்றை கண்காணிக்க நில கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கமிட்டி சார்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு ஏற்பட்டால் பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமம் என்றும் அங்கு இனி நிலங்களுக்கான பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மாமல்லபுரம், சதுரங்க பட்டினம், கொக்கிளாமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர். தங்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது எனவும் அரசின் அறிவிப்பால் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தங்களுடைய நிலம் தற்போது செல்லாக்காசாக மாறிவிட்டதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: