தமிழக அரசின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 74 ஆண்டுகளில் அதாவது கடந்த 2011 ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் கடன் சுமை ரூ.1,02,439 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ந்ததோ இல்லையோ கடன்சுமை மட்டும் கிட்டதட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள கடன்சுமை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வரும் நிதியாண்டில் ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்கினால்தான் அரசால் மாநிலத்தை நிர்வகிக்க முடியுமாம்.
அப்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும், இவ்வளவு ஏன் பிறக்கும் குழந்தைக்கும் தலா ரூ.79,083 கடன் இருக்கும். நிலைமை இப்படி இருக்க பட்ஜெட்டில் இதை செய்வோம், அதை செய்வோம் என்று சில அறிவிப்புகளை வேறு வெளியிட்டுள்ளனர். நிர்வாகத்திறனற்ற ஆட்சியாளர்களே கடன் சுமை அதிகரிக்க காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், புதிதாக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதிக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு, எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு திட்டத்தை அறிவிப்பதில்லை என்று முதல்வர் எடப்பாடி சால்ஜாப்பு சொல்லியுள்ளார். கடனில் தமிழகம் மெல்ல மூழ்க துவங்கியுள்ளபோதும், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வெறும் வாய்பந்தல் போடுகிறதா தமிழக அரசு. இதோ நான்கு கோண அலசல்.