கவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா செய்து, கவர்னர் தமிழிசைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி கடந்த 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கவிழ்ந்தது. தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதையடுத்து சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுதிக்கக்கூடாது என முதல்வர் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் கேரிக்கை விடுத்தனர். ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை. மேலும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது சபாநாயகர் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்.

இது காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. அவர் தனது கடமையை சரியாக செய்யவில்லை என காங்கிரசார் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் சபாநாயகர் பதவியை சிவக்கொழுந்து ராஜினாமா செய்து துணைநிலை ஆளுனர் தமிழிசைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சபாநாயகர் பதவியை சுயநினைவுடன் ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். முன்னதாக காரைக்காலில் நடந்த கூட்டத்தில் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அவரது மகன் ரமேஷ் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

Related Stories: