வத்திராயிருப்பு: சாப்டூர் வனச்சரகத்திற்குட்பட்ட சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாசி பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சாப்டூர் வனச்சரகம் பச்சரிசிமேடு தவசிப்பாறை மலைப்பகுதியில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதில், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்த சாப்டூர், வத்திராயிருப்பு வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு பணி நடக்கிறது.