அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி

சென்னை: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிமுக குழு தெரிவித்துள்ளது. இதை கேட்டு விஜயகாந்த் கடும் விரக்தியில் உள்ளார். அதே நேரத்தில் யாரிடமும் கெஞ்சும் பழக்கம் தேமுதிகவுக்கு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதே கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற கட்சிகள் மும்முரம் காட்டின. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, நாங்கள் தான் 3வது பெரிய கட்சி. தங்களுக்கு ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால், அதிமுக தலைவர்கள் தேமுதிகவை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘ராமதாஸை தேடி, தேடி சென்று கூட்டணி குறித்து பேசும் அமைச்சர்கள், தங்களை மதிப்பதில்லை’’ என வெளிப்படையாகவே குமுறி இருந்தார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அதிமுக, தேமுதிகவை உதாசீனப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தேமுதிக வாக்கு வங்கி மிகக்குறைவாக உள்ளதாலும், செல்வாக்கு குறைந்து விட்டதாலும் அவர்களுக்கு 4 முதல் 8 சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரேமலதா, ‘‘விரைவில் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என தெரிவித்திருந்தார். இருப்பினும், அதிமுக அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சில நாட்களுக்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கட்சியின் அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு குறைந்தது 2 எம்எல்ஏக்களாவது வெற்றி பெறவேண்டும். அல்லது 6 சதவீத ஓட்டுக்கள் பெற வேண்டும். அதிமுக கூட்டணியில் இருந்தால் இது நடக்காது. பாமக நம்மை வெற்றி பெறவும் விடாது. எதிர்பார்த்த சீட்டுக்களை தரும் நிலையில் அதிமுகவும் இல்லை. எனவே நமக்கு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தனித்து போட்டியிடுவதும் ஒத்து வராது என்றும் கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல், தேமுதிக தலைமை குழப்பத்தில் உள்ளது. சிலர் கமல் தலையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. அடுத்து பாஜவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருப்பதால், கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்ற முன்தினம் இரவு சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரண்டு கட்சியினரும் பேசிக் கொண்டனர்.

தேமுதிக தரப்பில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். அப்போது, பாமகவுக்கு 23  தொகுதிகள் கொடுத்து உள்ளீர்கள். எங்களுக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதிகள். பேச்சுவார்த்தை என்று இழுக்க வேண்டாம். ஒரே பேச்சுதான். சீட் வேண்டுமா, வேண்டாமா. வேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் 10 சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்’’ என்று கூறிவிட்டனர். இதனால் அவர்கள் முடிவு எடுக்காமல் உள்ளனர். இதையடுத்து, உங்கள் முடிவை விரைவில் சொல்லுங்கள், முதல்வர், துணை முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பாமகவுக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அதிக சீட்டுகளை கொடுத்து உள்ளதால் விஜயகாந்த் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூறிய 10 சீட்டுக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்தால் இன்று இரண்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து, விஜயகாந்த தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் கூட்டணி குறித்து கே.பி.முனுசாமி எம்பி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் சந்தித்து பேசினர்’’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டணி இறுதியாகவில்லை என்று வெளிப்படையாக தெரிகிறது.

* பொருளாதார பிரச்னைக்காகவே கூட்டணியை தேடுகிறோம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தேமுதிக வரலாற்றில் விஜயகாந்த்துக்கு முதல் வெற்றி விருத்தாசலம் தொகுதி. இரண்டாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு எதிர்க்கட்சி தலைவராக உருவாக்கிய வரலாறு உண்டு. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தே.மு.தி.க நின்றாலும், கூட்டணி கட்சி நின்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின் ஏழு மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இறுதிகட்ட பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். யாருடன் கூட்டணி என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். அனைத்து பூத்களிலும் ஆண்களுக்கு சமமாக பெண்கள் பணியாற்ற வேண்டும். தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம். தேமுதிக தமிழகத்தில் இன்று போட்டியிட்டால் கூட நாம் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி பெற முடியும். ஆனால் வெற்றி பெறவேண்டும், பொருளாதார பிரச்னை என்பதால் கூட்டணி பற்றி பேசி வருகிறோம், என்றார்.

Related Stories: