தனியார் கம்பெனியில் கார் திருட்டு: டிரைவர் கைது

செங்கல்பட்டு: தனியார் கம்பெனி காரை திருடிய டிரைவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). செங்கல்பட்டு, காண்டீபன் தெருவில் தங்கி, மகேந்திரா சிட்டியில்  உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்தார். இங்கு புதிதாக தயாரிக்கும் கார்களை, சுப்பிரமணி  சோதனை ஓட்டத்துக்கு எடுத்து செல்வது வழக்கம். இதேபோல், கடந்த ஒரு மாதத்துக்கு முன் சுப்பிரமணி, புதிய வகை காரை சோதனை ஓட்டத்துக்கு கொண்டு சென்றார். பின்னர், அவர், போலி கார் சாவி தயாரித்து, அதை நிர்வாகத்திடம்  ஒப்படைத்தார். ஆனால், கார் வரவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதிய வகை கார்களை வரிசையாக நிறுத்தி, தொழிற்சாலை நிர்வாகம் கணக்கெடுத்தது. அதில், ஒரு கார் குறைவாக இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அங்குள்ள  சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, சோதனை ஓட்டத்துக்கு கொண்டு சென்ற கார், பின்னர் கம்பெனிக்கு வரவில்லை. அதற்கான போலி சாவியை, சுப்பிரமணி கொடுத்தார் என தெரிந்தது. இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக  சுப்பிரமணி வேலைக்கு வரவில்லை. இதனால் அவர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.  இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசில், அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்த சுப்பிரமணியை நேற்று முன்தினம் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை  காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில், அவர் திருடிய காருக்கு போலி நம்பர் பிளேட் தயாரித்து, அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு விட்டுள்ளார் என தெரிந்தது. இதையடுத்து அவரை, கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: