மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, யோக பிரவேசம் செய்து பூட்டிய அறையில் 7 ஆண்டுகளாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 81வது பௌர்ணமி தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அனைவரும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை, சித்தரிடம் ஆசி பெற்றனர். காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு, பக்தர்கள் ஓம் நமசிவாய மந்திர அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மக்கள் சுபிக்ஷமாக வாழ ஞானலிங்கத்துக்கு பூஜை செய்து, ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் யாகம் நடத்தி, சத்ய நாராயண பூஜை செய்து மகாதீப ஆராதனை நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.