அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்

சென்னை: பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன் நேற்று தொடங்கியது.   ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி  சி-51 ராக்கெட் மூலம் இன்று காலை 10.24 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டானது இந்த ஆண்டில் விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் ஆகும். எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும்  முடிவடைந்த நிலையில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அமசோனியா-1 செயற்கைகோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின்  யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதில், அமசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவிவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோள் பிரேசில் நாட்டின் காடுகள் அழிப்பை  கண்காணிப்பதற்கு, அந்நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவும்.  பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: