சென்னை: பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன் நேற்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் மூலம் இன்று காலை 10.24 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டானது இந்த ஆண்டில் விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் ஆகும். எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அமசோனியா-1 செயற்கைகோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.