சென்ட்ரல் ரயில்நிலையம், விமான நிலையம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை

சென்னை:  சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பிரித்து படித்து பார்த்த ரயில்வே அதிகாரி அதிர்ச்சியடைந்தார். அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், டிஜிபி அலுவலகம், சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் வரும் மார்ச் 1ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை படித்து பார்த்த ரயில்வே அதிகாரி உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார்.  அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை, ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் ரயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கொச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம், தமிழக டிஜிபி அலுவலகத்திற்கும் கடிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்ததை தெரிவித்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவுயுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கடிதத்தின் முகவரி மற்றும் பின்கோடு நம்பரை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: