பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் அரையிறுதிக்கு கடைசி அணியாக முன்னேற கோவா-ஐதராபாத் அணிகள் இன்று மல்லுக்கட்டுகின்றன. கோவாவில் நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. ஏடிகே மோகன்பகான், மும்பை சிட்டி எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டியில் கோவா, ஐதராபாத் அணிகள் உள்ளன. தலா 19 போட்டிகளில் விளையாடி உள்ள எப்சி கோவா 30 புள்ளியுடனும், ஐதராபாத் எப்சி 28 புள்ளியுடனும் உள்ளன. இந்த 2 அணிகளும் தங்கள் கடைசி லீக் போட்டியில் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இதில் வெற்றியுடன் 3 புள்ளிகளை பெறும் அணி அரையிறுதிப் போட்டியை உறுதிச் செய்யும். தோல்வி அடையும் அணி லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான். அதே நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அப்போது கோவா 31 புள்ளியுடன் அரையிறுதியை உறுதி செய்யும்.
எனவே வெற்றி மட்டுமல்ல டிராவும் கோவாவுக்கு சாதகமாக இருக்கும். அதனால் ஐதராபாத் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே ஐதராபாத் வெற்றிக்கு அதிகம் முனைப்புக் காட்டும். அந்த அணி கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 4 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் டிராவும் கிடைத்தன. அந்த அணி கடைசியாக தோற்ற போட்டி கோவாவுக்கு எதிரான போட்டிதான். டிச.30ம் தேதி நடந்த அந்த முதல் சுற்று லீக் போட்டியில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியுள்ளது.