அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்காக வேகம் பும்ரா விடுப்பில் செல்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பட்டு வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா(27).ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியுடன் விலகினார். கடைசி மற்றும் 4வது டெஸ்ட்டில் அவர் விளையாடவில்லை. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இடம் பிடித்தார். சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3, 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். பின்னர் அகமதாபாத்தில் நடந்த 2வது டெஸ்ட் முழுவதும் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அதனால் முதல் இன்னிங்சில் பும்ராவுக்கு 6ஓவர்மட்டுமே வீச வாய்ப்பு கிடைத்தது. விக்கெட் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் ஒரு ஓவர் வீசக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ‘சொந்த காரணங்களுக்காக பும்ரா ஓய்வில் செல்கிறார். அதனால் அவர் அகமதாபாத்தில் நடக்க உள்ள 4வது டெஸ்ட்டில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக இன்னொரு வீரரை அணியில் சேர்க்கும் திட்டமில்லை’ என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.எனவே பும்ராவுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் உள்ள முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் 4வது டெஸ்ட்டில் களம் இறங்கலாம்.