அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக அல்வா கொடுக்கிறது : மு.க.ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்: உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி, எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்ற முழக்கத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே  கரசங்கால், துண்டல் கழனி, அண்ணா திடலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.  அப்போது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், பெரும்புதூர், பல்லாவரம்,  தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள்  சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை ஆகியவற்றிக்கான விண்ணப்பங்களை மனுவாக  அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவதாக நேற்று அதிமுக  அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான அரசாணைகூட அவர்களால் போட முடியாது. திமுக மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதாக கூறும் அதிமுக, இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு  என அனைத்து மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வன்னியர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சட்டமன்ற  உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: