பாட்னா: பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆகியோரை பீகார் பேரவையில் லாலு கட்சி எம்எல்ஏ பாராட்டி பேசியதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் தர்கிஷோர் பிரசாத் முதல் பட்ஜெட்டை (பீகார் பட்ஜெட் 2021-22) தாக்கல் செய்தார். முதல்வர் நிதிஷ் குமார் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை பாராட்டினார். ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவ், மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தை பொய்களின் மூட்டை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ரம்பாலி சிங், திடீரென பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை புகழ்ந்து பேசினார். இவரது பேச்சை கேட்டு, அவையில் இருந்த அனைத்து உறுப்பினரும் ஆச்சரியமடைந்தனர். உண்மையில், எம்எல்ஏ ராம்பாலி சிங், கொரோனா காலத்தில் சட்டப்பேரவைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பினார். அண்டை மாநிலமான உத்தரபிரதேச பேரவை, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொேரானா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக கூறினார். மேலும், நல்ல பணிகளை செய்தால் பாராட்ட வேண்டியதுதான் என்றும் கூறினார். இதனால், அவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது.