சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த 3 நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவுடன் உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.