3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: தமிழகம் முழுவதும் 3வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட மிக மிக குறைந்த அளவில் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் பேருந்துகள் இல்லாமல் அவதி அடைந்தனர். போராட்டத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் 3வது நாளாக 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் வள்ளலார் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் 3 மடங்கிற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு பேருந்துகளில் ரூ.37 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. பேருந்து பொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறைவாக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை பயன்படுத்தி வசூலிக்கப்படுகிறது.

Related Stories: