பூந்தமல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பல மடங்கு உயர்துள்ளது. இதனால் லாரி, கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் யுவராஜ் தலைமையில் வானகரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. அப்போது, வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் லாரி, கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்களை கயிறு கட்டி கோஷங்கள் எழுப்பியவாறு இழுத்து சென்றனர்.