திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருவொற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பிரமோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு 18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. திருவிழா நாட்களில், உற்சவர் சந்திர சேகரர், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் சிவபெருமான் மணக்கோலமான கல்யாண சுந்தரர் அலங்காரத்தில் எழுந்தருளினார். உடன், பார்வதி தேவி, திரிபுரசுந்தரி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேள்வியில் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.