திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருவொற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பிரமோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு 18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. திருவிழா நாட்களில், உற்சவர் சந்திர சேகரர், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த 24ம் தேதி நடைபெற்றது.  தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் சிவபெருமான்  மணக்கோலமான கல்யாண சுந்தரர் அலங்காரத்தில்  எழுந்தருளினார். உடன், பார்வதி தேவி, திரிபுரசுந்தரி கோலத்தில் எழுந்தருளினார்.  பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேள்வியில் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு காப்பு மற்றும் பூணூல் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இவர்களுக்கு பொங்கல், மோர் அன்னதானம், போன்றவை வழங்கப்பட்டது. மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உலா, இரவு மகிழடி சேவை போன்ற நிகழ்வுகள் நடந்தது. இன்று, தீர்த்தவாரி, கொடியிறக்கம், நாளை இரவு 18 திருநடனம் மற்

றும் பந்தம்பறி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. 

Related Stories: