சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு பின்புறம் உள்ள ராணுவ குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், அதை சுத்தம் செய்ய அன்னை சத்யா நகர் பி- பிளாக் பகுதியை சேர்ந்த ராஜா (30), சந்தோஷ் (40) ஆகிய இருவரை நேற்று அழைத்து வந்து, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். ராஜா, சந்தோஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி இருவரும் மயங்கினர். இதுபற்றி கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த கோட்டை போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.