திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக கொந்தகை, அகரத்தில் நேற்று அகழாய்வு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கீழடியில் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது கொந்தகை, அகரத்திலும் பணிகள் தொடங்கியுள்ளன. 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டன. தற்போது பணிகள் 6ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தின் அருகே ராஜாமணி என்பவரது நிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. அகரத்தில் 9 குழிகள் தோண்டப்பட்டு 1,020 பொருட்கள் கண்டறியப்பட்டன. 27 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, தாமிர நாணயம், தாமிர வளையல், தங்க காதணி, பாசிகள், பெண் முகம் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகை மயான தளத்தில் மனிதக்கூடுகள் கண்டறியப்பட்டன. இங்கு 7ம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக கூடுதல் பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.