மேட்டூர்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, அந்த நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச்சென்று நிரப்பும் திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரி மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நேற்று காலை, மேட்டூர் திப்பம்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த திட்டத்தை பெரிய சவாலாக எடுத்து செய்து முடித்திருக்கிறோம். இதற்காக பொதுமக்கள் தானாக முன்வந்து நிலங்களை அர்ப்பணித்துள்ளனர்.