திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பைகளை நிறுத்தி, துணிப் பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை, தற்போது சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.