69% இடஒதுக்கீடு வழக்குமார்ச் 5ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து மார்ச் 5ம் தேதி விசாரிக்கப்படும்.’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சென்னையை சேந்த தினேஷ் என்ற மாணவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல்வேறு துறைகளில் இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்க வேண்டும்,’ என கோரியுள்ளார்.

இதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தமிழகத்தின் பதில் மனுவில், ‘பின் தங்கிய சமூகத்தினரை முன்னேற்ற வேண்டும் எனபதற்காகதான் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக தற்போது தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, இதே கோரிக்கை கொண்ட மைனர் காயத்ரி என்ற மனுதாரரின் வழக்கோடு இணைத்து ஒன்றாக விசாரிக்கப்படும்,’ என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: